சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார். தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர். குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார். ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர். ...